இன்றைய தினம் பிரதோஷம்.சிவ பெருமான் வழிபாட்டுக்கு உகந்தது.
சுக்ல பக்ஷத்திலும் (வளர் பிறையிலும்) கிருஷ்ண பக்ஷத்திலும் (தேய் பிறையிலும்) வரும் திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையான மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை சிவனை வழிபட்டால் பிறவி துன்பம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது உறுதி. மாதம் இரு முறை வரும் பிரதோஷ வேளையில் நந்தி பகவானை வணங்குவது விசேஷம்.
பிரதோஷத்தை பற்றி புராணக் குறிப்பு ஒன்று உண்டு. தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையையும் வாசுகி பாம்பையும் கொண்டு பாற்கடலை கடைந்து அமிர்தம் தேடிய போது ஆலஹால விஷம் தோன்றியது. சிவ பெருமான் அதை உண்டு தேவர்களை காத்தார். அவரின் ஆணையின் பேரில் தேவர்கள் மீண்டும் கடலினை கடைந்து அமிர்தத்தை அடைந்தனர். இது நடந்த நாள் துவாதசி திதியாகும். தங்கள் சந்தோஷத்தில் சிவனை தொழ மறந்த தேவர்கள் மறு நாள் தங்கள் தவறை உணர்ந்தனர். அதுவே திரயோதசி திதியாகும். உடனே இறைவனிடம் சென்று மன்றாட அவரும் அவர்களை மன்னித்து, சந்தோசப்பட்டு நந்தியின் கொம்புகளின் நடுவில் நின்று ஆனந்த தாண்டவமாடினார். இந்த வேளையே பிரதோஷ வேளையாகும்.
இந்த வேளையில் சிவனை வேண்டுபவர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும் என்பது உறுதி. மற்றும் அனைத்து தேவ கணங்களும் தம் இருப்பிடம் விட்டு இறங்கி சிவ வழிபாட்டில் ஈடுபடும் வேளை இது. எம்பெருமானாம் சிவன் தேவி கௌரியை ரத்தினங்கள் நிறைந்த சிம்மாசனத்தில் அமர வைத்து, திரிசூலம் ஏந்தி,ஆனந்த தாண்டவமாடும் நேரமிது.
பிரதோஷ வேளையில் மாலை கோவில் சென்று பூஜை மற்றும் அபிஷேகத்தில் கலந்து கொண்டு சிவனருள் பெறுவோமாக. இந்த நேரத்தில் லிங்காஷ்டகத்தை படித்து பலன் அடைவோம்
.
ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.
Leave a Reply