தீபம் என்பது ஒளியைக் குறிக்கும். கார்த்திகை நன்னாள் தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இது ஒரு பெருவிழாவாக தமிழர் மற்றும் மலையாளிகளால் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று கார்த்திகை நக்ஷத்திரம் வரும் நாளில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழா அன்று வீடுகளில் வரிசையாக விளக்கேற்றி வண்ண கோலமிட்டு முருகனுக்கும், அண்ணாமலையாருக்கும் நெய்வேத்யம் படைத்து , இவ்விழாவை கொண்டாடுகிறார்கள்.
ஆன்ம ஒளி அளிக்கும் தீபம்
கார்த்திகை விழா ஒரு ஆன்மிக செய்தியை நம்முன் வைக்கிறது. எப்படி விளக்கில் திரி எரிந்து எண்ணையை உறிஞ்சி தீப ஒளியை ஏற்படுத்துகிறதோ அது போல் நம் உள்ளிருக்கும் தீய நினைவுகளை நீக்கி ஆன்மிக ஒளி வெளி வருகிறது. அது மட்டுமின்றி , தீப ஒளி நம்மை சுற்றி இருக்கும் தீய சக்திகளை அழிக்க வல்லது.
தீப ஒளியும் புராணங்களும்
கார்த்திகை தீபம் முருகக் கடவுளை வணங்கும் முகமாக அமைகிறது. முருகன் சிவ பெருமானின் நெற்றிகண்ணில் இருந்து பிறந்தவர். ஆறு குழந்தைகளாக ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர் .பின் பார்வதி தேவியால் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் கொண்ட குழந்தையாக ஆக்கப்பட்டவர். அவரின் பிறந்த நாளை நாம் கார்த்திகை பெருநாளாகக் கொண்டாடுகிறோம். கார்த்திகை பெண்கள் சிவபெருமானின் அருள் பெற்று என்றும் வானில் நக்ஷத்திரக் கூட்டமாக ஒளிர்கிறார்கள்.
கார்த்திகை தீபம் சிவபெருமானோடும் சம்பந்தம் உடையது. கார்த்திகை பெருநாளில்தான் சிவ பெருமான் பெரிய ஒளிப் பிழம்பாக பிரம்மா மற்றும் விஷ்ணுவின் முன் தோன்றினார். அவரின் ஆதியும் அந்தமும் தேடி இரு கடவுள்களும் சென்றனர். வராக வடிவெடுத்து விஷ்ணு பாதாளம் நோக்கி சென்றார். அவரால் சிவனின் அடியை காண முடியவில்லை. ஒரு அன்னத்தின் வடிவெடுத்து பிரம்மா மேலுலகம் நோக்கி சென்றார். உயர செல்லும் நேரத்தில் ஒரு தாழம்பூவை கண்டு சிவனின் தலையைக் கண்டுவிட்டதாக கூறினார். அவர் கூற்றின் பின்னிருந்த பொய்மையை அறிந்தவர் ஆதியும் அந்தமும் இல்லாத அருள்பெரும்ஜோதியாம் எம்பெருமான் . பொய்யுரைத்ததால் கோபமடைந்த சிவபெருமான், பிரம்மாவுக்கு தனி கோவில் அமைக்கப்பட மாட்டாது என சாபமிட்டார்.
திருவண்ணாமலை மகா தீபம்
திருவண்ணாமலை கோயிலில் ஏற்றப்படும் மகாதீபம் முக்யமான ஒன்றாக கருதப்படுகிறது. கோயிலின் மேற்புறத்தில் ஏற்றப்படும் பெரிய தீப ஒளியின் தரிசனம் வாழ்வின் பாபங்களைப் போக்கி முக்தி அளிக்கும் என்ற நம்பிக்கையோடு,இந்த தீப தரிசனத்திற்காக இந்துக்கள் கார்த்திகை அன்று அண்ணாமலை கோயில் வாசலிலோ தொலைகாட்சியின் முன்னாலோ தவம் கிடக்கிறார்கள்.
ஒளி விழா பெரு விழா
தீப விழா ஒரு பெருவிழாவாக சங்க இலக்கியமான அகநாநூறிலும், ஔவையின் பாடல்களிலும் சொல்லப்பட்டு உள்ளது. மற்றும் இது ஒரு பொன்நாளாக மங்கையரால் கருதப்படுகிறது. தீப ஒளி ஏற்றும் மங்கையர் மனம் சந்தோஷ அலைகளில் துள்ளும் நாளிது. மற்றும் அவர்கள் தங்கள் சகோதர பாசத்தை எடுத்து காட்ட உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. வட நாட்டு ராக்கியை போல்தென்னாட்டில் கார்த்திகை விழா சகோதர பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
மகளிர் பொரி உருண்டை பிடித்து, பூவும் பழமும் படைத்து முருகனையும் சிவனையும் வழிபடுகிறார்கள் இந்நாளில் .அனைவரும் மனம் களித்து, இறைவனை வேண்டி தீபம் ஏற்றி ஆன்ம ஒளி பெறுவாராக.
Leave a Reply